தென்னிலங்கையில் இடம்பெற்ற 4 படகு விபத்துக்களில் காணாமல்போனோரில் 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையின் தேவேந்திரமுனை, ஹிக்கடுவை, தங்காலை, பேருவளை பகுதிகளில் நேற்றுமுன்தினம் படகுகள் விபத்துக்குள்ளாகின.
தங்காலை – பரவிவெல்ல பகுதியில் கரை திரும்பிக் கொண்டிருந்த பல நாள் படகு கவிழ்ந்ததில் இருவர் காணாமல்போயினர். 4 பேர் டிங்கி படகின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில், காணாமல்போனோரைத் தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
இதேபோன்று, பேருவளை கடற்பரப்பில் கவிழ்ந்த படகில் இருந்த இரண்டு சகோதரர்களின் சடலங்கள் நேற்றுக் காலை பெந்தோட்டை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டன.
தேவேந்திரமுனையில் படகு கவிழ்ந்த விபத்தில் அந்தப் படகில் பயணித்த ஐவரில் இருவர் உயிரிழந்தனர். இருவர் காப்பாற்றப்பட்டனர். ஒருவரைத் தேடும் பணி தொடர்கின்றது.
இதேநேரம், ஹிக்கடுவையில் படகு கவிழ்ந்தபோது 6 பேர் அதில் பயணித்திருந்தனர். எனினும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் தெரியவருகின்றது.