வடக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு வசதியாக அரசு விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இப்போது அது வாபஸ் பெற்றிருக்கின்றமை குறித்து திருப்தி தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அதேசமயம் முன்னைய வர்த்தமானி அறிவித்தலை விலக்கும் புதிய அறிவித்தலின் வாசகங்கள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார்.
“அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேற்கொண்ட சட்டப் போராட்டமே கடைசி நேரத்தில் இவ்வாறு முன்னைய வர்த்தமானியை விலக்கும் நெருக்கடி நிலைக்குள் அரசை தள்ளியது என்பது வெளிப்படையானது – தெளிவானது.
எது, எப்படியாயினும் முன்னைய வர்த்தமானி அறிவித்தலை அரசு உத்தியோகபூர்வமாக வாபஸ் பெற்றுக்கொண்டமை திருப்தி தருகின்றது. அதனை வரவேற்கின்றோம். ஆயினும் அந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தலில், காணிக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்குப் போதுமான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி விலக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்படும் வாசகம் அரசின் அடுத்த கட்ட உள்நோக்கம் குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. போதுமான வாய்ப்பை அளிக்கின்றோம் என்ற பெயரோடு மீண்டும் இந்தக் காணி சுவீகரிப்பு நடவடிக்கை புதிய வடிவத்திக் நடைமுறைக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகையால் இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக நாம் அதிருப்தியும் கொண்டுள்ளோம். அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.” – என்றார்.