மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாதத் தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை எதுவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும், நீதியான விசாரணை நடத்த கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரியும் ஐனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து கையெழுத்து பெறும் நிகழ்வு பேத்தாழை பிரதான வீதியில் இன்று (28/06) இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தார்கள்.
இக் கையெழுத்து நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.




