ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லவும் அமைதியான கவனவீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று திருகோணமலையில் மேற்கொள்ளப்படவுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் கவனவீர்ப்பு நடவடிக்கையைப் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்று புதன்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8 மணியளவில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், குடிமைப் பூர்வ அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்தக் கவனவீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாகத் தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும், செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனிதப் புதைகுழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவக் குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கு – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காகப் பரிந்துரை செய்ய வேண்டும், தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுத் தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.










