எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11 ஆவது பிரிவுக்கு அமைய அரசால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இவ்வாறு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதற்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் நாடாளுமன்றம் ஜூன் 30 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூட்டப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆளும் கட்சியால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பிற்பகல் 4.30 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது பற்றிய தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.