அம்பாறை – அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில் சூட்சுமமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (18) புதன்கிழமை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது குறித்த மரக்கறி விற்பனையில் ஈடுபட்டவர் தன்னை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதை கண்டு அருகில் உள்ள வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார். எனினும் புலனாய்வு பிரிவினரும், பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து சந்தேக நபரை கைது செய்தனர்.
குறித்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.