“எமக்கு எந்தவொரு தரப்புடனும் ‘டீல்’ கிடையாது. அநுர அரசின் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கத் தயார். எமது அரசியல் பயணத்தை நிறுத்தப்போவதில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளிப்படையான அரசியலையே முன்னெடுக்கின்றது. எமக்கு எந்தவொரு தரப்புடனும் ‘டீல்’ கிடையாது. நாம் தனிநபர்களுடன் பேச்சு நடத்தமாட்டோம். கட்சிகளுடன்தான் எமக்குக் கொடுக்கல், வாங்கல் உள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளை ஒடுக்கி தமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க அநுர அரசு முற்படுமானால் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார். இந்நாட்டில் எமது அரசியல் பயணம் தொடரும்.
ஐக்கிய தேசியக் கட்சியால் அடக்குமுறைக்கு உள்ளான கட்சிதான் ஜே.வி.பி. எனவே, அடக்குமுறையின் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்பன பற்றி தற்போதைய அரசுக்கு நன்கு தெரியும்” என்றார்.