வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 102 பாடசாலைகள் பங்கு பற்றும் வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது கடந்த புதன் கிழமை தொடக்கம் நாளை (14.06) சனிக்கிழமை வரை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வின் போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை முன்பிருந்து பாண்ட் இசை முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டதுடன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பும், சாரணர்களின் அணிவகுப்பும், உடற்கல்வி ஆசிரியர்களின் அணிவகுப்பும், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
அத்துடன், கடந்த ஆண்டு வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த மைதானத்தில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், உதவி மாவட்ட செயலாளர் கு.சபர்ஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








