நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை அதாவது ஜூன் 09 ஆம் திகதி ஆட்சி அமைத்துவிட்டோம் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாநகர சபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
குச்சவெளிப் பிரதேச சபையில் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு வட்டாரங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தோம். இம்முறை நான்கு வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளோம் .
மேற்படி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அந்தந்த சபைகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். மேலும் ஊடகர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
சங்கு கட்சியோடு சபைகள் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? அவர்கள் என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கின்றார்கள்?
பதில் – ஆம் நடத்தினோம். சங்கு கட்சி அதாவது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் என்று கூறியிருந்தோம். பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் எனக் கூறியிருந்தோம்.
மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு துணைத் தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள் . அதுவும் தரலாம் எனக் கூறியிருந்தோம்.
மேற்படி விடயங்களை இறுதியாக ஜூன் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து மாண்புமிகு செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் கூறியிருந்தேன்.
அவர் என்னை ஜூன் 08 ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார். எனினும் அவர் சந்திக்கவில்லை. பலமுறை நான் தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லை. வேலைப்பளு ஆக இருக்கலாம் அழைப்பார் என நம்புகிறேன் .
உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அண்ணளவாக ஐம்பது சிறு பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கு கொண்டிருந்தேன். அனைத்து கூட்டங்களிலும் மக்கள் கேட்ட கேள்வி தேர்தலுக்கு பின்பு தவிசாளர் தெரிவுகள் எப்படி இடம்பெறும் என்பதாகும். அதற்கு நான் “ஒவ்வோர் உள்ளூராட்சி சபைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜனநாயக முறைப்படி தமக்குள் ஒருவரைத் தெரிவு செய்வர் ” என்று கூறியிருந்தேன் .
மேற்படிக் கருத்தை திருகோணமலையில் உள்ள புத்தி ஜீவிகளும் தமிழ் அரசுக் கட்சியின் நலன் விரும்பிகளும் மிகப் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களும் என்னிடம் வலியுறுத்தி இருந்தார்கள் என்பதனை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம் என நம்புகின்றேன் .
அதற்கமைய வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி சேனுராமன் கருணாநிதி என்பவரைத் தவிசாளர் ஆக தெரிவு செய்தனர்.
மூதூர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரைத் தவிசாளர் பதவிக்கான தமது வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.
திருகோணமலை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி கந்தசாமி செல்வராஜா என்பவரைத் தமது முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழிந்தனர்.
பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி துரைராசா தனராஜ் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.
குச்சவெளிப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜெகதீசன் நிமலஹாசன் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.
மேற்படி தெரிவுகள் ஜனநாயக முறைப்படி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.