மாமல்லபுரத்தில் கடந்த வைகாசி 30ம் திகதி 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முதற்கட்டமாக பரிசு அளிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 4-ம் தேதி 84 தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 3வது கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார்.
முன்னதாக கல்வி விருது விழா தொடங்குவதற்கு முன்னர் நேற்று ஆமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்க தொடங்கினார். அப்போது விஜய்,
” இந்த விழாவில் 2026 தேர்தல் பற்றியோ, என்னை இளைய காமராஜர் என்று அழைக்கவோ வேண்டாம். உங்களது நிலைக்கு உதவிய ஆசிரியர்கள் பள்ளியை குறித்து பேசுங்கள், மற்றவற்றை குறித்து பேச வேண்டாம்” என்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் இந்த பணிகளை தொடங்கினார். தற்போது தொடர்ந்து 3-ம் ஆண்டாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வைரத்தில் பரிசு அளிக்கப்படுகிறது.