இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து திரு.ஆ.சுமந்திரன் மற்றும் திரு.சி.வி.கே.சிவஞானம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட சதிச் செயற்பாடுகளால் தன்னால் தமிழ் தேசிய நீரோட்டத்தில் தொடர்ந்து செயற்பட முடியாதுள்ளது என்று காரணம்கூறி அக்கட்சியிலிருந்து வெளியே வந்த திரு.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தற்போது திரு.சி.வி.கே.சிவஞானம் தலைமையிலானதும் தமிழ் மக்களாலும் தமது கட்சி உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்ட தமிழ் தேசியத்தை சிதைத்து தமிழரசு கட்சியை அழிக்கின்றார் என்று அவராலே சென்ற வாரம் வரை குற்றம் சாட்டப்பட்ட திரு.ஆ.சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ் தேசிய விரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியியில் இருந்து விலகிய உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசிய பரப்பில் இவருக்காக மீன் சின்னத்தை வழங்கி நாடாளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் பதவி மோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ்த் தேசியத்தையும் தமிழ் மக்களின் தேசிய நலன்களையும் பேச்சளவில் மட்டும் வைத்துக்கொண்டு தனது சொந்த நலன்களையும் தமிழ்த் தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணில் எம் இளம் சமுதாயத்தை சீரழிக்கும் என்று தெரிந்துகொண்டும் தனது பிரத்தியோக ஆலோசகரின் ஆலோசனையையும் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தனது சுயலாபம் கருதி சாராயக்கடை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சுக் கடிதம் வழங்கிவிட்டு பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர் போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம். தமிழ்த் தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது.
தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஈ.பி.டி.பியினருடன் தமிழ்த் தேசிய நலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்த் தேசியம் ஒற்றுமைப்படுவதை சிதைக்கும் எண்ணக்கருவுடன் ஒப்பந்தம் செய்த திரு.சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் முன்னர் திரு.வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகத்தானோ தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது.
திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்த் தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும் நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவு காட்டினர். நாமும் அவ் நம்பிக்கையுடனே தமிழ் மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம். எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன். சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்த் தேசியப் பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம் தேசியத்திற்காக ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
