இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான புரட்சிக்குரிய முன்னேற்றமாக, மருத்துவர். நா.வர்ணகுலேந்திரன் அவர்கள், சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முதலாவது பேராசிரியர் நியமனமானது சித்த மருத்துவத்தின் தந்தையான அகஸ்தியர் வாழ்ந்த இடமான தென்கைலையான திருகோணமலையில், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவ பீடத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நியமனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ கற்கை நெறியினை உருவாக்குவதில் பேராசிரியர்.நா. வர்ணகுலேந்திரன் அரும்பாடுபட்டார்.
சித்த மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவைகள் இந்த நியமனத்தின் மூலம் புதுப் புள்ளியில் நுழைகின்றன. பேராசிரியர் நா.வர்ணகுலேந்திரன் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு, இத்துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு தூண்டுகோலாக அமையும்.
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகம் சித்த மருத்துவத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மற்றும் சர்வதேச மையமாக வளரும் பாதையில் முக்கியமான முன்னேற்றத்தைக் கொண்டுவரும் வகையில் இந்த நியமனம் எடுத்துக் காட்டப்படுகிறது.