மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரிக்கும் முகமாக தள்ளாடி 54 வது காலாட்படை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி கரப்பந்தாட்ட வெற்றி கிண்ண இறுதி நிகழ்வு நேற்றைய தினம்(4) புதன்கிழமை மாலை மன்னார் நகர சபை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய அணிகளும் அதே நேரம் இரண்டு இராணுவ அணி என இடம்பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணி மற்றும் தள்ளாடி இராணுவ B அணியும் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் அவர்களுக்கான போட்டி நேற்றைய தினம் புதன்கிழமை (4) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணியை இராணுவ அணியினர் வென்று 50.000 ரூபா பணப்பரிசு மற்றும் பதக்கங்களையும் அதே நேரம் வன்னி கட்டளையிடும் தளபதி வெற்றி கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.
இரண்டாம் இடம்பெற்ற மன்னார் பிரதேச செயலக அணிக்கு 25,000 ரூபா பணப் பரிசும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வன்னி பிராந்திய தலைமை கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கெளரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள், இராணுவ தளபதிகள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் இராணுவம், பொதுமக்கள், அரச அதிகாரிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










