“மக்களின் அமோக ஆணையால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டுப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், அந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை, பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அல்லது அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.
அரசுக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தைத் திசை திருப்புவதற்காகவும், அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன. எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது. பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை” என்றார்.