“இலங்கையில் அதிகரித்துள்ள நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் கொவிட் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், மக்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.” – இவ்வாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டில் அதிகரித்துள்ள நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் கொவிட் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்புப் பிரிவுடன், மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவை தொடர்பான தரவுகளை நாளாந்தம் சுகாதார அமைச்சின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுப்போம். நோய் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சு மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும்.
எவ்வாறிருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும். உலகில் கொவிட் பரவல் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானத்துடன் இருக்கின்றது.
இதற்கு முன்னர் உலகளாவிய தொற்று நிலைமையின்போது செயற்பட்ட அனுபவம் சுகாதாரத்துறையினருக்குக் காணப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் அந்தந்த நாடுகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது. எனவே, மக்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை. அதேவேளை, இது தொடர்பில் கவனயீனமாகச் செயற்படவும் தேவையில்லை.” – என்றார்.