இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் மாட்டு வண்டி சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனம் ஒன்றை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து, அவ் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் கையொப்பமிட்டு மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்காக, திருமதி கு. லூர்துமேரி சர்மிளா பெரேரா அவர்கள் சுயேட்சைக் குழுவொன்றை திட்டமிட்டு உருவாக்கினார்.
இதற்குத் தேவையான வேட்பாளர்களை இணைக்கும் முகமாக பெண்கள் சார்பான அமைப்பென்றும், நேசக்கரங்கள் அமைப்பென்றும், இது தாய்த்தமிழ் பேரவையின் ஒரு பிரிவு என்றும் தாம் நடத்தி வருகின்ற பதிவு செய்யப்படாத அமைப்பினைக் காரணங்காட்டியதோடு பெண்கள் தலைமையில் அரசியலில் ஈடுபட இணையுமாறு கேட்டதற்கிணங்க குறித்த சுயேட்சைக் குழுவில் சமூக அக்கறை கொண்ட பெண்களும், இளையோரும், ஏனையோரும் இணைந்து கொண்டோம்.
வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், தேர்தல் செலவீனங்களை தானும், நேசக்கரங்கள் அமைப்பும் பொறுப்பேற்பதாகவும், ஏனைய தேவைகளை செய்து தருவேன் என்றும் வார்த்தையளவில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
ஆனால் தேர்தல் கூட்டங்களையோ, காரியாலயங்களையோ, வேட்பாளர் அறிமுக செயற்பாடுகளையோ, பணர்களையோ அச்சிடாமல், செலவீனம் கருதி எம் அனைவரையும் உதாசீனப் படுத்தியதோடு எதனையும் செய்யாமல் விட்டுவிட்டனர்.
வேட்பாளர்கள் அலுவலகம் திறப்பதற்கும், பணர்கள் அடிப்பதற்கும் அனுமதி கேட்டதற்கு சாக்குப் போக்குகளைக் கூறி, அதனை நிராகரித்ததும், “நேசங்கரங்கள் அமைப்பு” என்றோ “தாய்த்தமிழ் பேரவை” என்றோ பெயர் சூட்டி பணர்களை அச்சிட வேண்டாம் என்று மறுத்தமையும் பின்னர் அறியக்கூடியதாக இருந்தது.
நாங்கள் பரப்புரைகளை செய்யும் பொழுதில் சில தடவை எங்களது பிரதேசங்களுக்கு வந்து பார்வையிட்டதுடன், வாக்காளரிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், குறித்த பிரதேசங்களில் மறைமுகமாக எமக்குக் கிடைக்கவிருந்த வாக்குரிமை நீங்கள் அவசியம் போடத் தேவையில்லை” எனத் திட்டமிட்டு தடுத்திருந்ததையும் நாம் பின்னைய நாட்களில் பரப்புரையின் போது அறிந்தோம்.
மேற்குறித்த செயற்பாடுகளிலிருந்து ஒரு போனஸ் ஆசனம் பெற்றால் போதும் என்ற திட்டமிட்ட சுயநல நோக்கம் கருதிய நயவஞ்சக நாடகத்தை எம்மால் ஓரளவு அறிய முடிந்தது.
தான் மட்டும் சபைக்குச் செல்வதற்கான சுயநலப் போக்குடன் தலைமை செயற்பட்டதைச் சுட்டி, பல தடவைகள் பேசிய போதும் வார்த்தைகளால் கபட நாடகம் ஆடி வேட்பாளர்களை அவ்வப்போது ஏமாற்றிய தருணங்களும் பல உள்ளன.
வேறுவழி இன்றி தேர்தலுக்காக தொடர்ந்து பயணித்தோம். எங்களது கடின முயற்சி, உழைப்பின் காரணமாகவும், வேட்பாளர்களின் போக்குவரத்திற்கும் கூட செலவுகளை நாங்களே மேற்கொண்டும், துரதிஷ்டவசமாக ஒரு போனஸ் ஆசனமே எங்கள் சுயேட்சைக் குழுவிற்கு கிடைக்கப்பெற்றது.
அனைவரும் சேர்ந்து பெற்ற ஒரு ஆசனத்தை வருடத்திற்கு ஒருவராக, பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சபைக்குச் சென்று பணிபுரிந்தால் அனைத்து பிரதேசத்திற்கும் எமது ஆசனத்தின் மூலம் அபிவிருத்தி அடையும் என்று பெரும்பான்மையானோர் விருப்பிக் கேட்டும் அதனைத் தான் மட்டும் அனுபவிக்கத் திட்டமிட்டு தலைவர் என்ற தலைக்கனத்தில் எம்மவருக்கும், எந்தவொரு தகவல்களை சொல்லாமலும், தெரிவிக்காமலும் மறைத்துக் கபட நாடகமாடுகின்றார்.
அத்தோடு போனஸ் ஆசனத்தை உறுதிப்படுத்தும், தேர்தல் ஆணையாளர் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட (10-05-2025) திகதியிடம்பட்ட கடிதத்தையே “தனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை” என மறைத்து எம் அனைவரையும் மீண்டும் ஏமாற்றி, குறித்த ஆசனத்தை தான் மாத்திரம் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை, சுயநலத்தோடு வேட்பாளர் அனைவரையும் குரோத உணர்வுடனும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டி, விமர்சனம் செய்து வருகின்றார்.
அத்தோடு முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ரூபன் என்பவரே நேசக்கரங்கள் குழுவின் ஸ்தாபகர் என்றும், அவரே எமது சுயேட்சையின் ஸ்தாபகரும் ஆவார் என்று கூறுவது அவர் சொல்வதையே நான் செய்வேன்” என்று கூறி பெண் வேட்பாளர் அனைவரையும் மிரட்டி சில முடிவுகளைத் தானே எடுத்து தன்னை வேட்பாளராக தீர்மானித்திருப்பதோடு. ஏனைய 22 வேட்பாளர்களையும் ஏமாற்றி எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும், உழைப்பையும் சுரண்டி சபையில் சென்று அமரத் திட்டமிட்டிருக்கிறார். இது சுயேட்சைக் குழுவை உருவாக்கிய போதே. ரூபன், சர்மிளா என்பவர்களின் திட்டமிட்ட சதி நாடகம் என்பது கடிதங்கள், தகவல்கள் மறைத்த பின்பே, நிரூபணமானது.
எனவே தங்களின் மேன்மையான கவனத்திற்கு நாங்கள் தெரிவிப்பது யாதெனில் சுயேட்சைக் குழு தலைவியான கு.லூர்து ஷர்மிளா பெரேரா என்பவரின் அடாவடித்தனமான, தான்தோன்றித்தனமான செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து, குழுவின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் நியாயமான, நீதியான, உண்மையான தீர்வினை வழங்கி, தான்தோன்றித்தனமான ஆசனத் தெரிவிற்கு, தடை உத்தரவு வழங்கி நல்ல தீர்ப்பை தருமாறு கேட்டு நிற்கின்றோம்” எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



