“இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசின் வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. இந்நிலை தொடர்ந்தால் வருட இறுதிக்குள் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது மக்களுக்கு அரசின் மீது இருந்த நம்பிக்கை குறைவடைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றது. மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றதைத் தற்போது அரசும் உணர்ந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் அனைவரையும் திருடர்கள் என்றே தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வந்தது. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரசாரம் செய்து வந்தார்கள்.
ஆனால், தேர்தலில் அரசு எதிர்பார்த்த வெற்றியை மக்கள் வழங்கவில்லை. 180 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசு ஒன்று குறுகிய காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தளவு பின்னடைவைச் சந்தித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசின் இயலாமையை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
அதனால் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தலைமையில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.
கலந்துரையாடல்கள் சாதகமாகவே அமைந்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அதனால் அதிகமான சபைகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் சென்ற வழியைத் தவிர வேறு வழியில்லை. இந்த வழிக்கு மாற்றமாகப் பயணித்தால் நாடு வீழ்ச்சியடையும் என்றே தெரிவித்திருந்தோம்.
தற்போது அரசு செல்லும் பயணத்தைப் பார்க்கும்போது இந்த வருட இறுதிக்குள் நாடு வீழ்ச்சியடையும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.