சில குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சுற்றுலாத்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ரணசிங்க, “உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன.
அறுகம்குடா பிகினி தடை குறித்து சமூக ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பதாகை பரவுவதை நாங்கள் கண்டோம். அத்தகைய முயற்சிகளை நாசப்படுத்த சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக சேனல்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றது.
இது 2025 இல் திடீரென தோன்றிய ஒன்றல்ல. எனவே, இந்த முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் குழுக்கள் இந்த நடவடிக்கைகளைத் தொடரக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொது இடங்களில் உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டினரும் பிகினி அணிவதை தடை செய்யும் புதிய சட்டம் அறுகம்குடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.
‘அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்’ என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அப்பகுதியில் பிகினி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
“அறுகம் குடாவிற்கு வரவேற்கிறோம்! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில், பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகள் மீதான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி. மேலும் அழகான அறுகம்குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
எனினும், பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கூற்றின்படி “இந்த பதாகையில் உள்ள கருத்து முற்றிலும் போலியானது என தெரிவித்துள்ளார். அத்தகைய தடை எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பதிவு ஒரு தனிநபரால் பகிரப்பட்டதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
