“ஒரு கட்சியின் வளர்ச்சியில் தொகுதி அமைப்பாளர்கள் பிரதான பங்கு வகிக்கின்றார்கள். அவர்களே மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அவர்களே பதவி விலகும் நிலையில் எதிர்வரும் டிசம்பரில் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகப் பதவியேற்கக் கனவு காண்கின்றார் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தோற்றம் பெற்று இதுவரை எந்தவொரு தேர்தலிலும் வெற்றியடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கத் தகுதி இல்லாத அவர், ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிக்கின்றமை வேடிக்கையானது.
தேசிய மக்கள் சக்தி அரசை விமர்சிக்கின்றமைதான் சஜித் பிரேமதாஸவின் நாளாந்த வேலையாக இருக்கின்றது. எமது கட்சியில் குறைகளைக் கண்டுபிடிப்பதே நிறுத்திவிட்டு தமது கட்சியில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு அவர் முயற்சிக்க வேண்டும்” என்றார்.