ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வது வருட நிறைவை முன்னிட்டும், பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி சீசன் 03 ஐ முன்னிட்டும் இன்று சனிக்கிழமை (24.05.2025) பழைய மாணவர்களால் நடைபவனி இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பழைய மாணவர் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.றாசீக், கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முகாமையாளர் ஆர்.எம். புஹாரி மற்றும் பழைய மாணவர் சங்க பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நடைபவனியானது பாடசாலை முற்றத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிவழியாக ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல் வீதி, மீறாவோடை மீறாஜூம்மா பள்ளிவாசல் சந்தியை அடைந்து, அங்கிருந்து மீறாவோடை அல் ஹிதாயா வீதி மற்றும் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ் வீதியூடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
நடைபெறவுள்ள சீசன் 03 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பழைய மாணவர் அமைப்புக்களில் இருந்து இருபத்தெட்டு கழகங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முகாமையாளர் ஆர்.எம். புஹாரி தெரிவித்தார்.


