முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார்கள்.
இதில் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (22) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மயங்கி விழுந்ததை அடுத்து ஏனைய இருவரும் குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
இதன் பின் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் உள்ள பற்றைகாட்டுக்குள் ஒருவர் மயங்கி கிடப்பதாக தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மயங்கிய நிலையில் உள்ளவரை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது,
நேற்று 23 வயதுடைய 10ம் வட்டாரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.