முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு, தமிழ் இனப் படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கக் கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தி மனுவொன்று நேற்றையதினம் கையளிக்கப்பட்டது.
இந்த மனுவை சமர்ப்பிக்கும் செயற்பாடானது, இனப் படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வசே மையத்தினால் (International Centre for Prevention and Prosecution of Genocide – ICPPG) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ICPPGயின் தொண்டர்கள் கையொப்பமிடப்பட்ட இந்த மனுவினை பாதிக்கப்பட்டவர்களான ஆரங்கன் ஜெயக்குமார், விஷ்வா ரமேஸ், அபினாஷ் திலீபன், ஜெயகீசன் விஜயகுமார், கிசோத்தன் காந்தன், ருத்திகா சிவஞானம் ஆகிய செயற்பாட்டாளர்கள் கையளித்திருந்தனர்.
மனுவின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:
- இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பிரேரிக்க வேண்டும்.
- தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றம் செய்த ஏனையவர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்துத் தடைகள் விதிக்க வேண்டும்.
- போர்க்குற்றவாளிகள் தூதுவர்கள் ஆகுவதற்கும் அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதற்கும் தடையிட வேண்டும்.
- சார்பற்ற சர்வதேச விசாரணையை அமைக்க பிரித்தானியா முன்னெடுப்பாக செயல்பட வேண்டும்.
- தமிழினப் படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ITJP, Sri Lanka Campaign for Peace and Justice, Redress ஆகிய சர்வதேச அமைப்புக்கள், British Tamil Conservative (BTC), Tamils For Labour (TFL) மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து பல வருடங்களாக ICPPG மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் சில இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விதித்துள்ள தடைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதுன், பல முக்கிய யுத்தக் குற்றவாளிகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட வேண்டியிருப்பதை வலியுறுத்தி, உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ICPPG இதுவரை ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதாரங்களை வழங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கை அடுத்த முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

