புதிய பாபா வாங்காவின் சுனாமி குறித்த கணிப்பினால் பொதுமக்கள் தங்களது பயணத் திட்டத்தை இரத்து செய்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி என்ற பெண் ”புதிய பாபா வங்கா” என அழைக்கப்படுகிறார்.
மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே இவர் கணித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இவர் தனது கணிப்புகளை 1999 ஆம் ஆண்டு “The future i saw’ என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறித்த புத்தகத்தில், 2025 ஜூலை மாதம் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பெரியளவிலான சுனாமி ஏற்படும் என அவர் கணித்துள்ளார். இந்த சுனாமியானது 2011 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டட்சுக்கியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஜப்பானில் உள்ள சீன தூதரகம், இயற்கை பேரழிவு குறித்து தனது நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
டட்சுக்கியின் சுனாமி தொடர்பான கணிப்பு காரணமாக, ஜப்பானுக்கு வரத் திட்டமிட்டுருந்த சுற்றுலா பயணிகள், 50 சதவீதம் பேர் தங்களது முன்பதிவை இரத்து செய்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.