தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடைமையாக்க வேண்டும் எனவும் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு காரணமான அரச அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் மீது உடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டு -அம்பாறை மாவட்ட மீனவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (19) மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர்கள் அரச உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், கல்முனை காரைதீவு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
இதன்போது ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்த மீனவர்கள் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வை கோரினர்.
ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன். மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு. மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை. மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவை நடந்த பாடில்லை. நாடாளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது. நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் என்பவர்களிடம் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது. மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம்.
கடற்கொள்ளையர் திருடும் ஆதாரம், அவருக்கு உடந்தையான அதிகாரிகளின் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கடற்கொள்ளையர் தான் திருடுவதை கடந்த காலங்களில் ஒத்துக்கொண்டும் அவருக்கு முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடற்கொள்ளையர் மட்டுமல்ல உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளும், அவர்களின் மீன்களை வாங்கும் வியாபாரிகளையும் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடைமையாக்க வேண்டும் என்றனர்.



