ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர்.
இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேசிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
என்று ரகானே கூறினார்.