தனியார் காணியொன்றினுள் அத்துமீறி மரம் வெட்டிய இராணுவத்தினருக்கு எதிராக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை ஒன்றினுள் இராணுவத்தினர் உட்புகுந்து வாகை மரத்தினை வெட்டிய வேளை பிரதேச வாசிகள் இது குறித்து மானிப்பாய் பொலிசார், வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு தெரிவித்து இது குறித்து அறிய முற்பட்ட பொழுது, வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் தொடர்ந்து மரத்தை கொண்டு செல்வதற்கு தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் இராணுவத்தினரிடம் காணியினுள் மரம் வெட்டுவதற்கு உரிமையாளரிடம் பெற்ற அனுமதி கடிதத்தினை தருமாறு மூன்று மணத்தியால கால அவகாசம் கொடுத்துள்ளனர் . இந்நிலையில் இராணுவத்தினர் குறித்த தனியார் காணி உரிமையாளரை நாட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனவும் பாதிக்கபட்டது சாதாரண பொது மகனாக இருந்திருந்தால் பொலிசார் உடனடியாக கைது செய்திருப்பர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து மானிப்பாய் பொலிசாரை தொடர்பு கொண்ட பொழுது இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வனவள பாதுகாப்பு திணைக்கள யாழ். மாவட்ட அதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும் வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெற தேவையில்லை எனவும் வழித்தட அனுமதியினை மாத்திரமே பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



