இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது என்றும், அதானி வெளியேற்றம் பெரும் பிழை என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் மனோ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அதானி கிரீன் எனர்ஜி – ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தைக் கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை – இந்திய மின் சுற்றுகள் இணைக்கப்பட இருந்தன.
இந்தப் பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதைப் புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது.
அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்றும் விட்டது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றினேன்.
இலங்கை – இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்குக் கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க முடியும்.
எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்கத் தவறி விட்டீர்கள். அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும்போது, அதைப் பேசி தீர்த்து இருக்கலாம்.
மறுபுறம், இந்தச் சம்பவம், இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது. சமீபத்தில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று வந்தார். அங்கே என்ன நடந்தது? அங்கிருந்து ஏதாவது, முதலீடுகள் வருகின்றனவா? இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள். மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியாவை “பைபாஸ்” செய்து வருவார்கள் என நினைக்கிறீர்களா?” – என்றுள்ளது.