அநுராதபுரம் அருகே சிறு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி இலஞ்சம் பெற முயன்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அநுராதபுரம் அருகே கல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறு வர்த்தகர் ஒருவர் வேளாண்மை அறுவடை இயந்திரமொன்றை இன்னொருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
குறித்த இயந்திரம் விற்பனை செய்தவருடையது அல்ல என்றும், வேறொருவரின் இயந்திரத்தை திருட்டுத்தனமாக கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யாமல் இருப்பதாயின் ரூ. 30ஆயிரம் தமக்கு இலஞ்சமாக தரப்பட வேண்டுமென்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த வர்த்தகரை மிரட்டியுள்ளார். இது தொடர்பில் வர்த்தகர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் அவருக்கு ஒத்தாசை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் நேற்றையதினம் இலஞ்ச ஊழல் ஒழிப்புத் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள், முறைப்பாட்டாளரிடம் 30, 000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.