வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் நடாத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திக்கம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று காலை 10:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு சம்பிரதாய பூர்வமாக கண்காட்சி கூடம் திறந்துவைக்கப்பட்டது.
இதில் பயிற்சி பெற்ற மாணவிகளின் ஆடைகள், கேக் வகைகள், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி. தர்சினி உருத்திர கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுனேத்ரா சுதாகர், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தையல் போதனாசிரியர் திருமதி இன்பராணி வரதராசா, அல்வாய் மேற்கு கிராம சேவகர் பாலலோஜினி ரவிச்சந்திரன், திக்கம் மத்திய சனசமூக நிலைய தலைவர் கந்தசாமி சிவசோதி, மனைப்பொருளியல் கல்வியை நிறைவு செய்த மாணவிகள், பெற்றோர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கும், நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள்
என்பவற்றை வழங்கி கௌரவித்தனர்.


