பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி இன்று பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் சென்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.
இதன்போது குறித்த பகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார்.
இதன்போது குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது சிலர் இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.






