உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டு வாசகங்கள் அரசமைப்பின் சில ஏற்பாடுகளுக்கு முரணாகக் காணப்படுவதால் அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு என்ற விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சட்டமூலத்தின் ஏனைய வாசகங்களை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் விசேடமாகக் கூடியது. இதன்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு வருமாறு அறிவித்தார்.
அரசமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ‘உள்ளூர் அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்’ தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபைக்கு அறிவிக்கிறேன்.
சட்டமூலம் முழுமையாகவும், மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் குழாமில் பெரும்பான்மையினராகிய இரண்டு நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதியரசர் குழாமில் மீதமுள்ள ஒரு நீதியரசர், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசமைப்புடன் முரண்படவில்லையென்பதால் அதனைப் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்ற முடியும் என தீர்ப்பளித்துள்ளார். – என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சத்தின் பொழிப்பினை வாசித்து சபாநாயகர் நிறைவு செய்தார்.
அத்துடன் உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு நிதி நெருக்கடி மற்றும் இதர காரணிகளால் பிற்போடப்பட்டது. இவ்வாறான நிலையில் சிவில் அமைப்பினர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் ‘உள்ளூராட்சி தேர்தல்கள் பிற்போடப்பட்டதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே வெகுவிரைவில் தேர்தலை நடத்துமாறு’ உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் ஏற்றுக் கொண்ட வேட்புமனுக்களுக்கு அமைய தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுவதாக அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தின. நடைமுறை விடயங்களை கருத்தில்கொண்டு ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கு அரசு தீர்மானித்து, அதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைச் சமர்ப்பித்தது.
இந்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்றையதினம் சபைக்கு அறிவித்தார். சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.