யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை தொடர்பில் இராணுவத்துடனும், தொடர்புடைய அமைச்சுகடனும் விரைவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தப்பத்து மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் – திஸ்ஸ விகாரை விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாகக் காணப்படுகின்றது. இது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. அத்துடன் அந்த விகாரையில் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. பௌத்த மதகுரு ஒருவர் அங்கு தங்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது என்றும், பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையைப் பதிவு செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆதலால், அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையைப் பதிவு செய்யவுள்ளது.” – என்றார்.