இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களைப் பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றார்கள். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.
எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் எனத் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்குக் கிடையாது.
எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களைப் பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களைத் தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை.
தமிழக மீனவர்கள் மீதோ, தமிழகத் தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை. ஒரு சில மீனவர்கள்தான் டோலர் படகுகளைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றார்கள். அதனையே நாம் எதிர்க்கின்றோம்.
எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்ய வேண்டியது தேவைப்பாடு எழாது. எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் எனப் போராடும் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லை தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் எழாது.” – என்றார்.