நாட்டில் இன்று மக்களை வாழ வைக்க முடியாத அரசே காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவிசாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகின்றது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றது.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாகக் கூறினர். ஆனால் இன்று அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திப்பதற்கே பயப்படுகின்றனர்.
இவ்வாறான பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளை அவர்கள் கைவிட்டுள்ளனர்.
இன்று அரச உத்தியோகத்தர்கள் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவானவர்கள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் இன்று கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். நலமாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. உற்பத்தி, நுகர்வு, முதலீடு என்பன குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. தங்கத்தை அடகு வைத்து விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும் உரங்களுக்கு நிலையான விலை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடன் சுழற்சியில் மீண்டும் சிக்கியுள்ளனர்.
கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து கடன் வாங்குவது அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களின் வருமான மூலங்கள் சுருங்கிப் போயுள்ளன.
அண்மையில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்ற போதும் அவர்களுக்கு உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. சேவை செய்ய வேண்டும் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை இந்த ஆட்சியாளர்களுக்குப் பெற்றுத் தந்தனர். பழைய பாணியிலேயே இவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர்.
மக்கள் ஆணைக்கு இந்த அரசு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். காலம் தாழ்த்தல், இழுத்தடிப்பு தீர்வாகாது. மக்கள் உங்களிடம் இருந்து இவற்றை எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகள் எழும்போது சமாளிப்புக்குப் பல விடங்களை முன்வைத்து வருகிறீர்கள். ஆனால், எடுத்த நடவடிக்கைகள் ஒன்றும் இல்லை. அதிகாரம் உங்கள் கைவசமே காணப்படுகின்றது.
எனது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் துன்பப்படும் மக்களுக்காகத் எப்போதும் திறந்தே இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்.” – என்றார்.