யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் சார்பில் இரண்டாவது தடவையாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆயுள் காலத்தில் மேயராக இருந்த வி.மணிவண்ணன் சபையின் அனுமதி இன்றி செலவு செய்த தொகையை உங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரால் முன்னாள் மேயருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். அவ்வாறு கடிதம் எழுதிய காலத்தில் அதே நிதிக் கொடுப்பனவு தொடர்பில் நீதிமன்றில் ஒரு வழக்கு இடம்பெறும் சமயம் இவ்வாறு கடிதம் அனுப்பியமை நீதிமன்ற அவமதிப்பு என வி.மணிவண்ணனால் 2024 ஆம் ஆண்டு முதலாவது தடவை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணை செய்யும் முகாத்தரம் அற்ற மன்றில் வழக்குத் தாக்கல் செய்தமையால் வழக்கு அப்போது வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கமைய 2024.08.07 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்தன. நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முகத் தோற்றம் அளவில் எண்ணிப்பித்து காண்பிக்கத் தவறியதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ்கரன் தீர்ப்பளித்தார்.