வவுனியா, கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள், பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று நேற்று (30.01) வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது.
பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை என பாதிகப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதி மற்றும் கற்குழி செல்லும் வீதி என்பவற்றில் மது போதையில் வாள்கள், பொல்லுகளுடன் நின்ற இளைஞர் குழு ஒன்று குறித்த வீதிகளில் கற்களை போட்டும், போத்தல்களை உடைத்தும் வீதியால் சென்றவர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்துள்ளனர்.
இதன்போது இரண்டு உந்துருளிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 107 இற்கு அழைப்பு எடுத்து அறிவித்த போதும் பொலிசார் வரவில்லை எனவும், தாம் தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் இருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.