முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்றையதினம் (27.01.2025) காலை பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலை காணியினை சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார். அப்போதைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில், இன்றையதினம் காலை பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் மீண்டும் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சர்மி, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் வில்வராசா, அப் பகுதி கிராம சேவையாளர், முள்ளியவளை பொலிஸார் ஆகியோர் குறித்த போராட்டகாரரிடம் கலந்துரையாடி இதற்கான தீர்வினை வெகு விரைவில் பெற்றுத்தருவதாகவும், தற்காலிக பாடசாலை நடைபெறும் இடத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும் கூறியதையடுத்து போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் உதவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கிளிநொச்சி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் பாடசாலை காணிக்கான சாதகமான பதில் கிடைக்காதுவிடின் பிள்ளைகளது கற்பித்தல் செயற்பாட்டினை இடைநிறுத்தி எமது பிள்ளைகளுடன் இவ்விடத்தில் தீர்வு கிடைக்கும் வரை மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டம் தற்காலிகமாக நிறைவு பெற்றிருந்தது.
குறித்த பாடசாலை பூதன் வயல் பொது நோக்குமண்டபத்தில் , மரங்களுக்கு கீழ் 53 மாணவர்களுடன் வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது.
குறித்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை குரல், சட்டம் எம்மை கைவிட்டு விட்டதா? பக்கச்சார்பற்ற தீர்வை தாருங்கள், கல்வி என்பது சம உரிமை அவை எமக்கு மட்டும் கிடைக்காதது ஏன்?, திறமை உள்ள எமது கல்வியை தட்டிப்பறிக்காதீர்கள்! போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு தற்காலிக கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





