நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமுர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமுர்த்தி வங்கிக்கு அருகில் இவர் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளான நிலையில் இதை அவதானித்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்ற போது உந்துருளியும் அவர் அணிந்திருந்த தலைக்கவசமும் மாத்திரம் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்து நீண்ட நேரம் தேடி கிடைக்காமையால் உந்துருளியை மாத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர் இன்று (25) விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் .
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு பின்னர் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


