ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ரணிலின் கட்சியும், சஜித்தின் கட்சியும் தேர்தல்களில் படுதோல்வியடைந்த கட்சிகள். இவ்விரு கட்சிகளும் இணைவதால் அந்தக் கட்சிகளில் அல்லது நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இந்தக் கட்சிகளின் இணைவு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஒருபோதும் சவாலாக அமையாது.
இலங்கையின் அரசியல் வராலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தனிச் சிறப்பு இருந்தது. அதை இறுதியில் ரணில் இல்லாதொழித்துவிட்டார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆரம்பத்தில் மக்கள் அலை மெல்ல வீசியது. எனினும், சஜித்தின் இயலாமையை அறிந்த மக்கள் அந்தக் கட்சியை நிராகரித்து விட்டார்கள்.
ரணிலினதும் சஜித்தினதும் தலைவர் பதவி ஆசையே இந்த இரண்டு கட்சிகளினதும் வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாகும்.” – என்றார்.