திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச பகுதியில் இன்று ( 2025.01.01 ) குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாயிகளினால் தொல்லியல் திணைக்களத்தினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குச்சவெளி பழைய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
1962 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 வரையான காலப் பகுதிகள் வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மிகப்பெரிய நெற்களஞ்சியசாலையாக விளங்கிய குறித்த இடத்தில் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் குச்சவெளி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக இயங்கி வந்தது.
கடந்த ஆண்டு குச்சவெளி பொலிஸ் நிலையம் அவ்விடத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த இடம் மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக இயக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் கடந்த 28.12.2024 அன்று இரவு வேளையில் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினரால் அவ்விடம் தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடம் என பதாதை வைக்கப்பட்டு தொல்லியல் துறை வசமானது.
ஏற்கனவே அவ்விடத்தில் தொல்லியல் துறைக்கு என அதிலிருந்து நான்கு ஏக்கர் அளவு காணி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில். அதற்கு மேலதிகமாக அடாவடியான முறையில் தொல்லியல் துறையினர் காணிகளை தம்வசப்படுத்தி இருக்கின்றனர். குறித்த இடமானது மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய இடமாக விளங்குவதோடு இந்து சமய கோயில், முஸ்லிம் பள்ளிவாசல் சிங்கள விகாரை போன்றன குறித்த இடத்திற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனேகமான காணிகள் தொல்லியல் துறையினரால் அடாவடியான முறையில் கையகப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி குச்சவெளி பிரதேச விவசாயிகள் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்று அந்தக் காணியை மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக பயன்படுத்துவதற்கு அனுமதி தருமாறு கோரி குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


