தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.