கனடாவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த 19 வயதான குர்சிம்ரன் கவுர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 19 வயதான குர்சிம்ரன் கவுர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி பிரிவில் உள்ள அடுப்பில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் கருகிய உடலை அதே நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவருடைய தாய் பார்த்து அலறி அழுதுள்ளார்.
இதுபற்றிய விசாரணையில், ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சக பெண் ஊழியர் கிறிஸ் பிரீஸி வெளியிட்ட டிக்டொக் வீடியோவில், வால்மார்ட்டில் இந்த ஓவன் எப்படி வேலை செய்கிறது என கூறியுள்ளார்.
5 அடி ஓர் அங்குலம் உயரம் கொண்டவராக இருக்கும் அவர், தன்னால் உள்ளே செல்ல முடியுமா? என தெரியவில்லை என கூறுகிறார். ஓவனின் உள்ளே அவசரகால பூட்டு ஒன்று இருக்கும். இதுதவிர, ஓவனுக்குள் பணியாளர் சென்று வேலை செய்ய வேண்டிய பணிகள் என எதுவும் கிடையாது என கூறுகிறார்.
அதனை தூய்மைப்படுத்தினாலும், இல்லையென்றாலும் கூட நான் ஒருபோதும் உள்ளே சென்றது இல்லை என கூறுகிறார்.இந்த ஓவனை பூட்ட வேண்டும் என்றால் கூட அது சுலபமல்ல. உங்கள் சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி கதவை தள்ளி, பின்னர் பூட்ட வேண்டும் என்று கூறுகிறார்.
ஓவனின் உள்புறம் ஒருவர் பூட்டி கொள்வதற்கான சாத்தியமும் இல்லை என அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். இதனால், இந்திய பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார். 2-வது நபர் ஒருவரே, குர்சிம்ரனை ஓவனுக்குள் தூக்கி வீசியிருக்க வேண்டும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.










